News Update :
Home » » விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

Penulis : anpusanthosh on Saturday, July 30, 2011 | 9:28 PM

1945ம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி. உலக வரலாற்றில் ஒரு கறுப்பு தினம். அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று ஐப்பானில்அணுகுண்டு வீச சின்னா பின்னமானது ஹிரோஷிமா. மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாகக் கிழிந்தது நாகாசாகி. ஆயிரமாயிரம் அப்பாவி உயிர்கள் அநியாயமாகப் பலி யான அந்தச் செய்தி கேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மியழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்துச் சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என்று நம்பிய அவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.



1879ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி ஜெர்மனியில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார் ஐன்ஸ்டைன். அவர் பிறப்பிலேயே ஓர் மேதை கிடையாது. உண்மையில் அவர் மூன்று வயது வரை பேசாததால் அவருக்குக் கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் அவர் சராசரி மாணவராகத்தான் இருந்தார்.

அவருக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்த போது நான்கு வயது. ஒருமுறை அவருக்கு compass எனப்படும் திசை காட்டியைப் பரிசாகத் தந்தார் அவரது தந்தை. அதன் உள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகை நோக்கி ஈர்த்தது.

பள்ளியில் சொந்தமாகவே calculus என்ற கணிதக் கூறைக் கற்றுக் கொண்டார் ஐன்ஸ்டைன். பின்னர் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார். அவரது கேள்விகளுக்குப் பதில் தர முடியாமல் ஆசிரியர்கள் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப் போகிறார் என்று அஞ்சியதாகவும் ஒரு குறிப்பு கூறுகிறது.

சிறு வயதிலிருந்தே வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக் காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசை மேதை மோசாட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்குத் திறமை இருந்தது.

அவருக்குப் பதினைந்து வயதான போது இத்தாலியின் மிலான் நகருக்கு அவர்கள் குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துப் போனதும் ஸ்விட்சர்லந்துக்குச் சென்றார் ஐன்ஸ்டைன். புகழ் பெற்ற Swiss Federal Polytechnic நுழைவுத் தேர்வில் அவர் தோல்வியடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு அவரைச் சேர்த்துக் கொண்டது அந்தப் பலதுறைத் தொழிற் கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சி பெற்றதும் ஸ்விஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டைன்.



அவருக்குக் கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்களை பதிவு செய்து அவற்றை ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாகப் பல ஆராய்ச்சிகளைச் செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதத் தொடங்கினார். 1905ம் ஆண்டு Zurichபல்கலைக் கழகத்தில் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 

கண்ணுக்குப் புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பற்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டைன் Theory of Relativity  என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு. அந்தக் கோட்பாடு மூலம் அவர் உவகுக்குத் தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான் E = mc(square). விஞ்ஞான உலகத்திற்கே அது ஒரு அடிப்படை மந்திரமாகக் கருதப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பைச் செய்த போது அப்போது அவருக்கு வயது 26தான்.

1921ம் ஆண்டு அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் photo electric effect  என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முதலாம் உலகப் போரில் ஜெர்மனி கலந்து கொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டைன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த போது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்.



1939ம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்¢ஸ்டைன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டைத் தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகுவிரைவில் அணுகுண்டைத் தயாரிக்கக் கூடும் என்றும் அதில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டைன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டைன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டைனுக்குத் தெரியாமலேயே சொந்தமாக அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. அதன் விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உலக வரலாற்றை ஒரு கணம் இருட்டடிப்பு செய்த நாகாசாசி ஹிரோஷிமா சம்பவம்.

E = mc(square) என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்தத் தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டைனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கறுப்புப் புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டைனின் கோட்பாட்டால் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபளின் பழைய ஏற்பாடு மாதிரி என்றால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு பைபளின் புதிய ஏற்பாடு மாதிரி என ஓர் ஒப்பீடு கூறுகிறது.

தங்கள் இனத்தவர் என்று பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும் படி ஐன்ஸ்டைனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்தப் பதவியை ஏற்க மறுத்து விட்டார் ஐன்ஸ்டைன்.

ஸ்விட்சர்லாந்தில் பயிலும் போது மிலவா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார் ஐன்ஸ்டைன். இரு பிள்ளைகளுக்குத் தந்தையானார். பின் மணமுறிவு ஏற்படவே எல்சா என்ற உறவுப் பெண்ணை மணந்து கொண்டார். எல்சா சிறிது காலத்திலேயே இறந்து விட சுமார் இருபது ஆண்டுகள் தனித்தே வாழ்ந்தார் ஐன்ஸ்டைன்.

அணுகுண்டு தயாரிப்பதற்கு அவருடைய சார்பியல் கோட்பாடுதான் அடிப்படை என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டைன். உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த அவர் 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி தனது 76வது வயதில் காலமானார்.



நவீன அறிவியல் ஐன்ஸ்டைனுக்கு மிகப் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாகச் சிந்திக்கக் கூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் என்று ஒருவர் கேட்க, கடவுள் இந்த உலகை எப்படிப் படைத்தார் என்பதை ஒரு நாள் நான் கண்டுபிடித்து விட வேண்டும் என்று கூறினாராம் ஐன்ஸ்டைன். அவருக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஆழமான சிந்தனை. மற்றது அறியப்படாதவற்றைப் பற்றிய அளவிட முடியாத தாகம். அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் வசப்படும் இவரை பற்றி படிக்கும் போது எனது நினைவலையில் இப் பாடல் ஞாபகம் வரும்
Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger